நாயர் பானம்
அர்ச்சகர் போல்
தோளில் துண்டைப்
போட்டுக் கொண்டு
எங்கள் நாயர்
‘ டர்’ ரென்று டீயை
ஆற்றும் போது
டப்பா கிழியவில்லையே என்று
ஜவுளிக் கடை சக்கரய்யா
சன்னமாய்ச் சிரித்திடுவார்
பாலென்று கேட்க,
நீர் கொஞ்சம் விட்டு
நுரைக்காக
நீள முழம் போடும்போது
விரியும் வெள்ளைத்துகில் வழியே
நாயரின் தொந்தி
நலுங்குவதை
நகராட்சித் தோட்டி
நல்லம்மா பார்த்து
நறுக்கென்று
வாய்புதைப்பாள்
ஆரத்திக் கரைசலில்
சுன்ணாம்பு கரைதல் போல்
நாயர் டிகாக்ஷன்
பால் டீயில்
சாயம் அடிக்கிறது
பால் கிளாஸை
வாயில் வைத்துப்
பக்குவமாய்
உறிஞ்சும் போது
நாயரின்
நுரைத் தயாரிப்புகள்
நளினமாய்
மொரமொரக்கின்றன
டீயில்………இல்லையென்று
நீட்டிவிட்டால்
ஓர் நொடிக்குள்
அஸ்காவில்
அலுங்காத
தேக்கரண்டி
டீக்கிளாஸில் மணியடிக்கிறது
பின்னாலே டீக்கூட
தேனாக இனிப்பெடுக்கிறது
வரிசையில் நின்றாலும்
வந்தவர் சிடுத்தாலும்
வாய் வைத்த கிளாஸை
வெந்நீரில் விட்டு
வெளியே எடுப்பதால்
நாயர் கிளாஸுக்கு
நல்ல கிராக்கி
மார்ச் மாத
நோன்பிருக்கும்
மாணவ மணிகள்
நான்கு மணிக்கு வந்து
நாயர் பானம்
பருகிவிட்டால்
மணி எட்டான பின்னாலும்
கொட்டாவி விடுவதில்லை
பாவம் நாயர் வாய்
அவரின்
ஏற்ற இரக்கமிடும்
இரண்டு கை போல
மேலும் கீழும்
ஏறி இறங்கி
கொட்டாவி
ஆற்றுகிறது
நன்றி: கணையாழி
எந்த கமன்டும் இல்லை
No comments yet
Leave a reply